Saturday, November 28, 2009

காதல் கவிதைகள்


நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*



இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.



*



யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.



*



உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!



*



தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?




நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்

1 comment:

Anonymous said...

very good poems.develope your skill.